வசைமாரி பொழிவதில் வல்லவர் யார்? ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கை:
14.3.2009 அன்று வெளியிட்ட எனது அறிக்கையில் வினவப்பட்டுள்ள ‘மின் வெட்டு’, ‘விலைவாசி உயர்வு’, ‘வழக்கறிஞர்கள் போராட்டம்’ உள்ளிட்ட நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து பதில் அளிக்காமல், நான் ஏற்கெனவே எனது அறிக்கைகளின் மூலமாக சுட்டிக்காட்டிய உண்மைச் சம்பவங்களை பட்டியலிட்டு, தனக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்பதை ‘வசைமாரி பொழிவது யார்?’ என்ற தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி தனது அறிக்கையில் “மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை” என்று கூறியிருக்கிறார். கடுமையான மின்வெட்டு, விஷம் போல் ஏறும் விலைவாசி, வெறிச்சோடி கிடக்கும் தொழிற்பேட்டைகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, தற்காலிக வேலை நிறுத்திவைப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தேக்க நிலை, பொருளாதார மந்த நிலை, வேளாண் உற்பத்தி பாதிப்பு, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை என ஏராளமானவற்றை மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு சான்றாகக் கூறலாம். இத்தனைக்கும் பிறகு, மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்படவில்லை என்று கருணாநிதி கூறியிருப்பது, மாநில நிர்வாகம் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

“ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வந்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று மருத்துவமனையில் படுத்துக் கொண்டே கடிதம் எழுதியதாகக் கூறும் கருணாநிதி, வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பொது மக்களையும் கண்மூடித்தனமாக தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் பதில் அளிக்கவில்லை. இதன் மூலம் குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் கருணாநிதியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

நான் ஏதோ வசைமாரி பொழிந்து அறிக்கைகள் வெளியிட்டதாக கருணாநிதி கூறி, எனது அறிக்கைகளில் உள்ள சில வார்த்தைகளை பட்டியலிட்டு இருக்கிறார். அந்தப் பட்டியலில் உள்ள வார்த்தைகளைப் பார்க்கும் போது, அவை வசைமாரி பொழியும் அறிக்கைகள் அல்ல, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அறிக்கைகள் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதாக அறிந்து கொள்வார்கள். உதாரணமாக, ‘கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய் மூடிக் கிடப்பார்” என்று 4.10.2008 அன்று நான் வெளியிட்ட அறிக்கையிலே குறிப்பிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அந்த அறிக்கையில், “தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார்; வாய்மூடிக் கிடப்பார்” என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை என்றால் வாய்மூடிக் கிடப்பார் என்றுதான் இதற்குப் பொருள். இதுதான் உண்மை நிலை. இதில் தவறு ஒன்றும் இல்லை.

அடுத்தபடியாக, “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான எந்த தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை” என்று நான் 10.10.2008 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். ‘காவேரி நதிநீர் தாவா’ தொடர்பாக 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். ஆனால், இன்று வரை அந்தப் பிரச்சினையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட கூட மத்திய அரசு முன்வரவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் கருணாநிதி வற்புறுத்தி இருப்பாரா? அதனால் தான் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான எந்தத் தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு இல்லை என்று தெரிவித்திருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நான் என்னுடைய 10.10.2008 ஆம் நாளிட்ட அறிக்கையில், “உண்மையிலேயே தமிழர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும்.” என்று தெரிவித்திருந்தேன். என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டிருக்குமேயானால், இந்த நேரத்தில் இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். அற்ப பதவி சுகத்திற்காக தமிழினப் படுகொலைக்கு துணை போன கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், ஜனநாயக ரீதியில், உண்மை நிலையை எனது அறிக்கைகள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஆற்றும் ஜனநாயகக் கடமைகளை எல்லாம் வசைமாரி பொழியும் அறிக்கைகள் எனக் கருணாநிதி குறிப்பிடுவது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும். எனது அறிக்கைகளை வசைமாரி பொழியும் அறிக்கைகள் என்றால், “மூக்கறுந்து போன மூளி, அலங்காரி, நாக்கறுந்து தொங்குகின்ற நரி, நாலாந்தரப் பெண், மகுடம் பறி கொடுத்த மாயராணி, செப்படி வித்தை மாமி, மலம், வேஷக்காரி, தெருப் பொறுக்கி, நாய்க் கொழுப்பு, பூதகி, நாய், திமிங்கலம்” போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் அறிக்கைகளை என்ன என்று சொல்வது! ஒரு வேளை இவையெல்லாம் கருணாநிதியின் கண்களுக்கு பொன்மொழிகளாக தோன்றுகிறதோ! நல்லவற்றை நாராசம் என்று சொல்வதும், நாராசத்தை நல்லது என்று சொல்வதும் கருணாநிதியின் இயல்பு போலும்!

இதிலிருந்து வசைமாரி பொழிவதில் வல்லவர் யார் என்பதை அறிவார்ந்த தமிழ் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். எனவே, மரபுக்கு ஒவ்வாத, அவதூறான, கேவலமான, நாகூசும் அறிக்கைகள் வெளியிடுவதையும், என்னைக் குறை கூறுவதையும் நிறுத்திக் கொண்டு, எனது அறிக்கைகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் ஆட்சியில் இருக்கப் போகும் சில நாட்களாவது நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக