க‌ருணாநிதி உண்ணாவிர‌த‌ம்: ஜெயல‌லிதா கிண்ட‌ல்

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 23)வெளியிட்ட அறிக்கை:

தன்னுடைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு சுய நோக்கத்தின் அடிப்படையில் “உண்ணா விரதம்” கபட நாடகத்தை மருத்துவமனையில் துவக்கப் போவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு முதலமைச்சர் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது வெட்கக்கேடானது. இது போன்ற ஒரு கையாலாகாத முதலமைச்சரை இந்திய நாடு இதுவரை கண்டதில்லை.

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், இலங்கையில் ராஜபக்சே நடத்துகின்ற தமிழினப் படுகொலையைக் கண்டித்து இங்குள்ள தமிழர்களை அணிவகுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த ராஜபக்சே அரசுக்கு நவீன சாதனங்களையும், ஆயுதங்களையும் அனுப்பி மத்திய அரசு உதவி செய்த போது அதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதித்ததை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அந்தக் கூட்டத்தை பற்றி கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக யார் கிளர்ச்சி நடத்தினாலும், அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வழி வகுத்து, தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காண்பதாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. வன்முறையின் மறு உருவம் கருணாநிதி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் ரத்தக் களறி ஏற்படுத்தியது, மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தை எரித்து அதன் விளைவாக மூன்று அப்பாவி உயிர்களைப் பறித்தது, வன்முறை மூலம் அனைத்து இடைத் தேர்தல்களையும் நடத்திக் காட்டியது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் வன்முறையை புகுத்தியது ஆகியவற்றிற்கு எல்லாம் யார் காரணம்? மேற்படி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா? இதையெல்லாம் மறந்துவிட்டு கருணாநிதி இவ்வாறு பேசுவது முறையல்ல.

கடந்த 33 மாத கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் உட்பட பல வன்முறை நிகழ்ச்சிகளை கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் தமிழகக் காவல் துறையினர் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இவ்வாறு பல நிகழ்ச்சிகளை பார்த்துதான் அவர்களே வன்முறையாளர்களாக மாறிவிட்டனர். காவல் துறையினரையே வன்முறையாளர்களாக மாற்றிய பெருமை, காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியைத்தான் சாரும். இதுதான் அவருடைய 33 மாத கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் ஒப்பற்ற சாதனை!

“இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படும் சதிச் செயலில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை நண்பர்களும் அறியாமல் பலியாகி விடக் கூடாது” என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதி முதலமைச்சர் மட்டுமல்ல; காவல் துறையை உள்ளடக்கிய உள் துறைக்கும் அவர்தான் அமைச்சர். இதிலிருந்து காவல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கருணாநிதியே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி என்றால், காவல் துறையினர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை தன்னுடையக் கட்டுப்பாட்டில் இல்லை என்றால், முதலமைச்சர் பதவியில் தொடர அவருக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. இவ்வாறு வேண்டுகோள் விடுப்பதை விட பதவியை விட்டு விலகுவது மக்களுக்கு நன்மை பயக்கும். மேலும் அவர் குறிப்பிடுகையில், அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடுமையான மின் தட்டுப்பாடு, விஷம் போல் ஏறும் விலைவாசி, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, தொழில் வளர்ச்சியின்மை, விவசாயி உற்பத்தியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, என கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கருணாநிதிக்கு வேண்டுமானால் இவைகள் சாதனைகளாக தெரியலாம். ஆனால் தமிழக மக்களுக்கு வேதனைதான்.

“தூண்டிவிடுகின்ற கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்று படுங்கள், ஒத்துழையுங்கள்” என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் உபதேசம் செய்திருக்கிறார் கருணாநிதி. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்துவதற்கான அறிவுரையை உள் துறைச் செயலாளர் மூலம் காவல் துறையினருக்கு தெரிவித்ததே முதலமைச்சர் கருணாநிதிதான் என்று எஸ். துரைசாமி என்ற ஒரு வழக்கறிஞர் சென்னை, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறாரே? இது குறித்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி எதையும் தெரிவிக்கவில்லையே? “மவுனம் சம்மதம்” என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை என்றால், இது போன்ற தாக்குதலுக்கு யார் மூல காரணம்? காவல் துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் துறையினரால் சூறையாடப்பட்டதற்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா? தவறு செய்த காவல் துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதற்கெல்லாம் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து மக்கள் தக்க பதிலை எதிர்பார்க்கிறார்கள்.

காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் ஒன்றுபட முடியாவிட்டால், ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையிலேயே உண்ணாநோன்பு இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் கருணாநிதி. தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் தன்னுடைய அறிக்கையின் மூலம், தான் முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு அடியோடு லாயக்கற்றவர் என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார்.

கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தவறு செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. காவல் துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியவில்லை. இதிலிருந்து கருணாநிதி தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிய வருகிறது. ஒரு செயலிழந்த முதலமைச்சராக கருணாநிதி இருக்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை கலைத்து விடுவது தான் அவருக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்பதை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

5 கருத்துகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இந்தப் பிரச்சனைதான் என்றில்லை. போன வாரம் அண்ணா சாலையில் அரை மணிநேரம் டிராஃபிக் ஜாம் ஆனதற்காகக்கூட திமுக அரசு விலகினால் ஜெயலலிதாவிற்கு மகிழ்ச்சியே :)

ரமேஷ் வைத்யா சொன்னது…

செய்தி பிரமாதம்.

சிவாஜி த பாஸ் சொன்னது…

கலக்கிட்டீங்க, வாழ்த்துக்கள்...! ஆட்சியில் இருக்க அருகதை அற்றவர் கிழவன்! மலம் உண்ணவும் தயங்காத கூட்டம் கிழவரை சுற்றியள்ள கூட்டம்!

Payam Ariyan சொன்னது…

சிவாஜி த பாஸ்: நீங்கள் சொல்வதில் உண்மையும் இருக்கிறது!

பெயரில்லா சொன்னது…

///கலக்கிட்டீங்க, வாழ்த்துக்கள்...! ஆட்சியில் இருக்க அருகதை அற்றவர் கிழவன்! மலம் உண்ணவும் தயங்காத கூட்டம் கிழவரை சுற்றியள்ள கூட்டம்!///

வழிமொழிகிறேன்........

கருத்துரையிடுக