காங்கிர‌சுக்கு ஜெய‌ல‌லிதா அழைப்பு

ஜெய‌ல‌லிதா இன்று (பிப்ரவரி 19) 61 ஜோடிகளுக்கு சென்னையில் திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:

திருமணம் என்பதும் ஒரு கூட்டணிதான். அந்தக் கூட்டணி வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்றால், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இருவரும் அதற்காகப் பாடுபட வேண்டும், முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிகவும் தேவை. இப்போது திருமண சீசன். ஆகவே, இப்போது கூட்டணி சீசன் என்றும் கூறலாம். தேர்தல் நெருங்கி வருகிறது. ஆகவே, அரசியல் கட்சிகளுக்குள்ளே கூட்டணி ஏற்படுவது பற்றி எங்கே பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது. கூட்டணியைப் பற்றி பேசுகின்ற போது, இப்போது நான் திருமணக் கூட்டணியைப் பற்றிப் பேசவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியைப் பற்றிப் பேசுகிறேன். அரசியல் ரீதியான கூட்டணியைப் பற்றிப் பேசும் போது, தி.மு.க-வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சில உண்மைகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தி.மு.க-வுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். சிலரை பல நாட்களுக்கு ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்ற முடியாது. இதை தி.மு.க-வினர் நன்கு உணர வேண்டும். கடந்த 33 மாத காலமாக, தி.மு.க. தமிழ் நாட்டில் மைனாரிட்டி ஆட்சியை அமைத்த பிறகு வரலாறு காணாத வன்முறை, ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகள், அக்கிரமங்கள், அராஜகங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள் என்று ஒரு எல்லையே இல்லாத அளவிற்கு என்னென்ன தீய செயல்கள் இருக்க முடியுமோ, என்னென்ன முறைகேடான சட்ட விரோதமான காரியங்கள் இருக்க முடியுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை குற்றங்களைப் புரிந்தும், இத்தனை முறைகேடான செயல்களைப் புரிந்தும், இத்தனை சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டும் கூட எந்தத் தண்டனையும் பெறாமல் தி.மு.க-வினர் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு என்ன காரணம்? காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு தி.மு.க-விற்குக் கொடுத்து வரும் ஆதரவுதான் காரணம். தொடர்ந்து கடந்த 33 மாத காலமாக நடைபெற்ற அனைத்து சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலும், இடைத் தேர்தல்களிலும் தொடர்ந்து தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. தி.மு.க. இந்த தேர்தல்களில், இடைத் தேர்தல்களில் அடைந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல. பண பலம், படைபலம், ரவுடிகள் பலம், அராஜகம், வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் இவற்றின் காரணமாகத்தான் தி.மு.க. வெற்றி பெற முடிந்தது. இதையெல்லாம் தி.மு.க-வால் எப்படி சாதிக்க முடிந்தது? காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தி.மு.க-விற்கு தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுதான் இதற்கெல்லாம் காரணம். அதனால் இப்போது தி.மு.க-விற்கு ஒரு அசட்டு தைரியம் வந்துவிட்டது. தி.மு.க-விற்கு இப்போது ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. இப்படியே தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவிடலாம்; இப்படியே ரவுடிகளை வைத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு, பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் இவற்றை வைத்தே தொடர்ந்து வெற்றி பெற்றுவிடலாம்; நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட இவற்றின் மூலமாகவே வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க. நம்புகிறது.

மக்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று தி.மு.க. கருதுகிறது. இன்று நமக்குத் தெரிந்த அளவில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. உடனான கூட்டணியை தொடர விரும்புவதாகவே தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வும் அவர்களுடைய கூட்டணி நீடித்திருந்தாலே போதும். அதை வைத்தே வாக்குகளைப் பெற்றுவிடலாம், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகின்றன. காங்கிரஸ் கட்சியும் சரி, தி.மு.க-வும் சரி, மிகப் பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். மிகப் பெரிய தப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்ன அந்த தவறு? என்ன அந்த தப்பு? காங்கிரசும் சரி, தி.மு.க-வும் சரி, மக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். வாக்காளப் பெருமக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இருந்தாலே போதும். தாமாகவே வாக்குகள் வந்து குவிந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழ் நாட்டு மக்கள் தி.மு.க-வின் மீது எல்லையில்லா கோபம் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் மீது மக்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. என்றாலே இன்றைய தினம் தமிழக மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். கடந்த 33 மாத காலமாக இதுவரை வரலாற்றில் கண்டிராத அளவிற்கு தி.மு.க-வினர் செய்து கொண்டிருக்கும் அத்தனை அக்கிரமங்களையும், அட்டூழியங்களையும் மக்கள் பார்த்து கொதித்துப் போயிருக்கிறார்கள். மத்திய அரசில் இருந்து கொண்டு தி.மு.க. செய்துள்ள இமாலய ஊழல்களைப் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், ஸ்பெக்ட்ரம் ஊழல். ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் புரிந்திருக்கிறார்கள் இந்த ஒரே ஒரு ஸ்பெக்ட்ரம் ஊழலில். இன்னும் எத்தனையோ ஊழல்களைக் குறிப்பிடலாம். மத்திய அரசில் தி.மு.க. மந்திரிகள் எந்தெந்த இலாக்காவிற்கு பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்களோ அத்தனை இலாக்காக்களிலும் இமாலய ஊழல் புரிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலோ இங்கே தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊழலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும். அது வெளிப்படையாகவே, பகிரங்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டு மக்கள் மனதில் இன்று ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. எல்லோருக்கும் தெரிகின்ற வண்ணம் ஒளிவு மறைவு இன்றி தி.மு.க. இவ்வளவு பெரிய ஊழல்களைச் செய்து கொண்டிருக்கும்போது, மத்திய அரசு, குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தி.மு.க. மந்திரிகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி. அதனால், தி.மு.க. மீது தமிழக மக்களுக்கு இருக்கின்ற கோபம் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். தி.மு.க. மீது தமிழக மக்கள் எந்த அளவிற்கு தாங்க முடியாத ஆத்திரத்தில், கோபத்தில் இருக்கிறார்களோ அந்த அளவிற்குத் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அளவிற்கு ஊழல் புரிந்து கொண்டிருக்கும் இந்த பாசிச தி.மு.க. ஆட்சிக்கு, இந்த சர்வதிகார தி.மு.க. ஆட்சிக்கு, ஊழல் மலிந்த தி.மு.க. ஆட்சிக்கு, காங்கிரஸ் கட்சி ஏன் இன்னும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தமிழக மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசைப் பொறுத்தவரை தமிழக மக்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது. ஏதோ கடந்த காலத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக இப்போது நடந்து கொண்டிருக்கும் தவறுகளையெல்லாம், ஊழல்களையெல்லாம், குற்றங்களையெல்லாம், அராஜகங்களையெல்லாம், அநியாயங்களையெல்லாம் மறந்துவிட்டு அப்படியே மக்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது.

இனி நடைபெறப் போகும் தேர்தலில், குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களிடம் ஓட்டு கேட்டு வாக்குகளைப் பெற வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால், இதுவரை தமிழ்நாட்டில் தி.மு.க-வின் அராஜக அரசுக்கு ஆதரவு கொடுத்த பாவத்திற்கு காங்கிரஸ் கட்சி பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும், மத்தியிலும் காங்கிரஸ் கட்சி தி.மு.க-விற்கு கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவு ஒரு பாவம் என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். மாநிலத்திலும், மத்தியிலும் தி.மு.க-விற்கு காங்கிரஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதரவு, அவர்கள் செய்கின்ற அந்தப் பாவத்திற்கு அவர்கள் பரிகாரம் தேடியே ஆக வேண்டும். இன்று கோபத்தில் கொதித்துப் போயிருக்கும் தமிழக வாக்காளர்களை சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களை ஆறுதல் அடையச்செய்து, அவர்களுடைய வாக்குகளைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே விரும்புமேயானால், முதலில் காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் உள்ள தி.மு.க. மைனாரிட்டி ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்; தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும் மத்திய அமைச்சரவையில் உள்ள தி.மு.க. மந்திரிகளை மத்திய அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் நீக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற மிகப் பெரிய ஊழல்களை புரிந்துள்ள தி.மு.க. மந்திரிகள் மீது காங்கிரஸ் கட்சி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளப் பெருமக்களை வந்து சந்திக்க முடியும். அவர்களிடம் வாக்குகள் கேட்க முடியும். கடந்த காலத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றன. அதனால், அந்தப் பழைய நட்புறவை நினைவு கூர்ந்து, பழைய நட்புறவை பாராட்டி, நண்பர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். தி.மு.க. தற்போது புதை மணலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. புதை குழியில் இப்போது தி.மு.க. சிக்கிக் கொண்டு மூழ்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே, இனிமேல் தி.மு.க-வை யாராலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க-வின் கதை முடிந்துவிட்டது. எப்படியாவது அந்தப் புதை குழியில் இருந்து தி.மு.க-வை காப்பாற்ற வேண்டும், அதை வெளியே தூக்கி விட வேண்டும் என்று காங்கிரஸ் உதவிக்கரம் நீட்டினால், நேசக்கரம் நீட்டினால் காங்கிரஸ் கட்சியும் அதே புதை மணலில் விழுந்து சிக்கிக் கொண்டு அழிந்து போய்விடும்.

ஆகவே காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு எதிர்காலம் வேண்டும் என்று கருதினால் தி.மு.க.வுடனான உறவை உடனடியாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஒன்றை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்காக இந்த விளக்கத்தைக் கூறுகிறேன். புதை மணல் என்பது என்ன? ஒரு முறை ஒருவர் அந்தப் புதை மணலில் விழுந்துவிட்டால் பின்னர் மீளவே முடியாது, வெளியே வரவே முடியாது. அப்படியே மூழ்கிப் போய்விட வேண்டியதுதான். கதை முடிந்துவிடும். அதோடு சரி. யாராவது ஒருவர் அய்யோ பாவம் நம்முடைய நண்பர் அந்தப் புதை மணலில் விழுந்திருக்கிறாரே அவருக்கு உதவி புரிவோம் என்று கரம் நீட்டி அவர் கையைப் பிடித்து இழுத்து அவரை வெளியே கொண்டுவந்துவிடலாம், காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. கையை யாராவது கொடுத்தால் அவர்களும் அந்தப் புதை மணலில் மாட்டிக் கொண்டவர்களோடு சேர்ந்து மூழ்கிப் போய்விடுவார்கள். ஆகவே கையை பின்னால் இழுத்துக் கொள்வதுதான் நல்லது.

கடந்த காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. அன்னை இந்திராகாந்தி அவர்கள் இருந்த காலத்தில், பின்னர் அவரது மகன் ராஜீவ்காந்தி இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அன்னை இந்திராகாந்தி அவர்களை எனது அன்னையாகவே நான் பாவித்தேன். அவரும் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அன்பைப் பொழிந்தார். அதைப் போலவே ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த காலத்தில், ராஜீவ்காந்தி அவர்களும் நானும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொண்டிருந்தோம். நல்ல நட்புறவு கொண்டிருந்தோம். ஆகவே அந்த பழைய நட்புறவை மனதில் வைத்துத்தான், அந்தப் பழைய நட்புணர்வை பாராட்டித்தான் இன்றைய தினம் ஒரு நண்பர் என்ற முறையில் காங்கிரசுக்கு இந்த ஆலோசனையை கூறி இருக்கிறேன். அதை அவர்கள் ஆர அமர உட்கார்ந்துகொண்டு தீர்க்கமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கும் சரி, தி.மு.க-விற்கு ஆதரவு கொடுக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மக்கள் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள். அது காங்கிரசாக இருந்தாலும் சரி, வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி வரப்போகும் தேர்தலில் மக்கள் தி.மு.க-வை விரட்டியடிக்கப் போகிறார்கள். அதே கதிதான் தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிக்கும் ஏற்படும். ஆகவே அந்த ஒரு கதியை சந்திக்க வேண்டாம் என நினைத்தால் தி.மு.க-வுடனான உறவை உடனடியாக துண்டித்துக் கொள்வது நல்லது. தி.மு.க-வும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, தமிழ் நாட்டு மக்களின் கோபத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வினரும் இதுவரை மக்களைப் பற்றியே மறந்துவிட்டார்கள். மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்பதை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவார்கள். ஆகவே, தவறு செய்வது என்பது மனித இயல்பு. தவறு செய்யாதவர்கள் யாருமே இந்த உலகில் இருக்க முடியாது. ஆனால், தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து, அந்தத் தவறை எப்படி திருத்திக் கொள்வது என்று சிந்தித்து அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டால் அவர்கள்தான் மனிதர்கள். அது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடையப் போகிறது என்பது நிதர்சனமான உண்மை.

நமக்கு அந்த வெற்றியைக் கொடுக்க, நல்ல தீர்ப்பைக் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, எந்தக் கட்சி நம்முடன் கூட்டணி சேர்கிறதோ அந்தக் கட்சிக்குத்தான் லாபம். எந்தக் கட்சி நம்முடன் கூட்டணி சேரவில்லையோ அந்தக் கட்சிக்குத்தான் நஷ்டம். நமக்கு லாபம், லாபம், வெற்றி வெற்றி தான் என்பதைத் தெரிவித்து, நீங்கள் அனைவரும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்லும் வகையில் உங்கள் ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

1 கருத்துகள்:

HS சொன்னது…

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

கருத்துரையிடுக