ராமதாஸ் எங்கே போகிறார்?: ஆற்காடு வீராசாமி அறிக்கை

அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (பிப்ரவரி 23) வெளியிட்ட அறிக்கை:

பொதுவாக அரசியல் தலைவர்களுக்கு ஒரு “ஸ்டடி மைன்ட்’’ வேண்டும். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்பதைப் போல அங்கே போனால் அதிக இடம் கிடைக்குமா, இங்கேயே நீடித்தால் அதிக இடம் கிடைக்குமா? என்று நினைத்துக் கொண்டு செயல்படக் கூடாது. அது மாத்திரமல்ல, அன்றாடம் தன் பேரில் ஏதாவது ஒரு அறிக்கை வந்தால்தான் தன்னை தமிழ்நாட்டு மக்கள் மறக்காமல் இருப்பார்கள் என்று மனதிலே எண்ணுவதையெல்லாம் பேசுவதும் கூடாது. எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்றால் ராமதாஸ் முதல் நாள் கலைஞர்தான் எல்லாம், அவர்தான் வழி நடத்த வேண்டும் என்கிறார். அடுத்த நாள் இந்த ஆட்சிக்கு தைரியமில்லை, ஆட்சிக் கலைப்புக்கு அஞ்சுகிறார்கள் என்கிறார்.

நேற்றையதினம் கூட்டாக அளித்த பேட்டியின் போது டாக்டர் ராமதாஸ் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார். இவருக்கு அந்த எண்ணம் இருப்பதாக நாங்கள் யாரும் கூறவில்லையே! கலைஞர் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் இவர்கள் மீது சொல்லவில்லையே? மேலும் டாக்டர் தாங்கள் யாரும் சதிகாரர்கள் அல்ல என்று பேட்டியிலே சொல்லியிருக்கிறார்கள். அவரைப் பற்றிச் சொல்லாததையெல்லாம் யாரோ சொல்லிவிட்டதாக அவரே கூறிக் கொண்டு எதற்காக பதில் சொல்லிக் கொள்கிறார்.

சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம் - சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று யார் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றித்தான் “ஆட்சிக் கலைக்க முயற்சிக்கிறார்கள்’’ என்று சொல்கிறோம். உடனே “எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பதைப் போல டாக்டர் பதில் சொல்ல முற்படுவானேன். மேலும் டாக்டர் தனது பேட்டியில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போதுதான் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தியதாகவும், ஆளுங்கட்சியாக இருந்த போது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார். இதே கருத்தை அவர் சில நாட்களுக்கு முன்பு பேசி, தி.மு.க. ஆளுங் கட்சியாக இருந்த போது என்னென்ன போராட்டங்களை எந்தெந்த தேதிகளில் நடத்தியது என்ற பட்டியலையே முதல்வர் கலைஞர் பட்டியலாகக் கொடுத்திருந்தாரே, அதை டாக்டர் ராமதாஸ் படிக்கவில்லையா?

தி.மு.க. ஆட்சியிலே இருந்த போதுதானே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக என்று காரணம் கூறி கலைக்கப்பட்டது. அதைக் கூட இல்லை என்று மறுக்கிறாரா? முதல்வர் உண்ணாவிரத அறிவிப்பையே நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்கள் என்றால், இதுவரை எதற்கெடுத்தாலும் நாடகம் என்று ஜெயலலிதாவும், வைகோவும்தான் கூறிக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் டாக்டர் ராமதாசும் சேர முயற்சிக்கிறாரா? பழி போடுவதும், பழி வாங்குவதும் கலைஞர் பாணி என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உங்களை கைது செய்து சிறையிலே அடைத்தார்களே, அதைப் போல கலைஞர் ஏதாவது செய்து விட்டாரா? உங்களைக் கைது செய்த போது - அதைப்பற்றி அறிக்கை விட்ட ஜெயலலிதா ஏ.சி. அறையிலே இருந்தவர்களுக்கு சிறையிலே இருக்க முடியாமல் மனைவியை தூதாக அனுப்பி வைத்தார்கள் என்று குற்றஞ்சாட்டினாரே, அப்படி ஏதாவது கலைஞர் தற்போது உங்கள் மீது பழி போட்டு விட்டாரா? நேர் காணலுக்காக நீங்கள் ஜெயலலிதாவின் அலுவலகத்திற்குச் சென்ற போது மணிக்கணக்கிலே காத்திட வைத்தார் என்று நீங்களே ஏடுகளில் சொன்னீர்களே, அது போல் ஒரு முறை உங்களிடம் கலைஞர் நடந்து கொண்டது உண்டா?

“பிடிக்காத மனைவி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’’ என்பதைப் போல எதற்கெடுத்தாலும் கலைஞர், கலைஞர் என்று காய்ந்து விழுகிறீர்களே என்ன காரணம்? மருத்துவ மனையிலே முதுகுத் தண்டிலே அறுவை சிகிச்சை செய்த நிலையிலே கூட 24 மணி நேரமும் மக்கள் பிரச்சினைக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவரைப் பார்த்து நாக் கூசாமல் நாடகம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கே அது சரியாகப்படுகிறதா? கலைஞர்தான் அடிக்கடி சொல்வார், அரசியலிலே நாளை என்றோ ஒரு நாள் நேரில் சந்திக்க நேரிடும், அப்போது ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிட நேரிடும், அதற்கு ஒரு இழுக்கு வராத அளவிற்கு மனிதாபிமானத்தோடு, பேசிட முன் வர வேண்டும். நாளைக்கே கூட்டணி வரலாம், வராமல் போகலாம், அப்போது உங்களைச் சந்திக்கும் போது, கலைஞர் உண்ணா விரதம் இருப்பதாக அறிவித்திருப்பதை நாடகம் என்று சொன்ன சொல் போகுமா? ஒவ்வொரு தொண்டன் உள்ளத்திலும் அந்த வார்த்தை புண்படுத்தாதா? உறவு இருக்கட்டும், இல்லாமல் போகட்டும், ஆனால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது. ஆனால் நீங்கள் அதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். கலைஞரைப் பொறுத்த வரை அவர் பழி வாங்கவும் மாட்டார், பழி போடவும் மாட்டார். அதற்கு தமிழ்நாட்டில் வேறொருவர் இருக்கிறார். அவர் கடைக்கண் பார்க்க மாட்டாரா என்று நீங்கள் தவிப்பது எங்களுக்கு நன்றாக தெரியவே தெரிகிறது.

1 கருத்துகள்:

அபி அப்பா சொன்னது…

சூப்பர்!

கருத்துரையிடுக