கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பேட்டி

கருணாநிதிக்கு இன்று (பிப்ரவரி 11)அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சையை டெல்லி டாக்டர் ஜெய்ஸ்வால்,ராமச்சந்திரா மருத்துவமனையின் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் ஆகியோர் செய்தனர். மார்த்தாண்ட‌ம் நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டி:

முதல்வர் கலைஞர் கடந்த இரண்டாண்டு காலமாக முதுகு வலி காரணமாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு வார காலமாக கீழ் முதுகில் வலி மிகவும் அதிகமான நிலையில் மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவரால் தூங்க முடியவில்லை. பகல் நேரத்திலே கூட அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. எந்த வகையிலே சிகிச்சை அளிப்பது என்பதைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்ட போது, முதுகெலும்பில் (எல்.2, எல்.3 பகுதியில்) தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக பல மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழுவினர் கூடி அறுவை சிகிச்சை மேற்கொள்வதென்ற முடிவிற்கு வந்தோம். தொடர்ந்து பிசியோதரபி, மாத்திரைகள், ஊசி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இருந்தாலும் வலி குறையவில்லை. அதன் பின்னர்தான் எபிட்யூரல் இஞ்செக்ஷன் கொடுக்க முடிவு செய்து, அதுவும் அவரது வலியைக் குறைக்க உதவிடவில்லை. எனவேதான் அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்தோம்.

இந்த முடிவிற்கு வந்த பிறகு டெல்லியிலே உள்ள ஆல் இண்டியா இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் மருத்துவ நிபுணர் அரவிந்த் ஜேஸ்வாலலை தொடர்பு கொண்டோம். அவர் முதுகெலும்பில் அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்றவர். அவரும் சென்னைக்கு உடனடியாக வந்து முதலமைச்சரை சோதனை செய்தார்.

டாக்டர் ஜேஸ்வால் பேட்டி:
முதல்வருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்தோம். முறையான அறுவை சிகிச்சை நடைபெற்று, முதுகெலும்பிலே இருந்த தசை பிடிப்பு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை நன்றாக நிறைவுற்று அவர் தற்போது நன்றாக தேறி வருகிறார். அறுவை சிகிச்சை அறைக்கு 6.45 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன்பான தொடக்கப் பணிகள் ஒரு மணி நேரம் நடைபெற்றது. மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று 10 மணிக்கு முடிந்தது. மயக்க மருந்து நிலையிலிருந்து திரும்பி அவர் தற்போது பூரண நலம் பெற்று வருகிறார். தற்போது ஐ.சி.யு. அறையிலே இருக்கிறார். அங்கே 48 மணி நேரம் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் இல்லம் திரும்புவார். ஒருசில நாட்களில் அலுவலகப் பணிகளை மேற்கொள்வார்.

அமைச்ச‌ர் அன்பழ‌க‌ன் பேட்டி:
கலைஞர் மிகச் சிறப்பான முறையில் நுணுக்கமான அறுவை சிகிச்சை செய்திருக்கிற மருத்துவக் குழுவினர் டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டெல்லியிலிருந்து வந்திருக்கின்ற டாக்டர் ஜேய்ஸ்வால் மற்ற நிபுணர்களுமாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிறைவேற்றியிருக் கிறார்கள். முதலில் அந்த மருத்துவக் குழுவினருக்கு நான் என்னுடைய உளமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தி.மு.க.வின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் சார்பாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகச் சிறப்பான சிகிச்சை வழங்கி அவர் குறைந்தது பத்து நாட்கள் வரையில் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் - பார்வையாளர்கள் இல்லாமல் முழு அளவில் - எந்தத் தொத்துக்கும் இடமில்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்தப் பத்து நாட்கள் வரையில் கலைஞரிடத்தில் மிக நெருக்கமாக பழகிய நண்பர்களானாலும் - அமைச்சர்களாக இருந்தாலும் - மற்றவர்களாக இருந்தாலும் இந்தப் பத்து நாட்கள் கலைஞருடைய உடல் நலத்திற்கு சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அவர்கள் இதை ஏற்றுக் கொண்டு கலைஞரைப் பார்க்க முயற்சிக்காமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் அனைவரும், கலைஞருக்குப் பாதுகாப்பான ஒரு சிகிச்சை கிடைக்க வேண்டுமே என்று மிகுந்த கவலையோடு இருந்தார்கள். பல்வேறு இடங்களிலிருந்து தொலைபேசிகள் மூலமாக, திரும்பத் திரும்ப கலைஞரின் உடல் நலத்தை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். மத்தியிலிருந்து பல அமைச்சர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் தெரிவிக்க விரும்புவது கலைஞர் நலமோடு இருக்கிறார், நலமுடன் திரும்பி வந்து விரைவில் அவருடைய பணிகளை ஏற்பார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக