க‌ருணாநிதிக்கு ஜெய‌ல‌லிதா நான்கு கேள்விக‌ள்

ஜெயலலிதா இன்று (ஜனவரி 29) வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர்கள் குறித்த எனது கருத்தை திரித்துக் கூறி, ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கு நான் எதிராக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க கருணாநிதி மெத்த சிரமப்பட்டு முயற்சிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. எனவே, இது குறித்த எனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபட சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழ் மக்கள் விடுதலை இயக்கம் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , ஈழம் புரட்சிகர அமைப்பு போன்ற அமைப்புகளை இலங்கைத் தமிழர்களின் காவலர்கள் என்று ஒரு காலத்தில் அ.தி.மு.க. கருதியதை நான் மறுக்கவில்லை. ஆனால், அடிப்படையில் தமிழ்ச் சகோதரர்கள் என்பதை மறந்து, மிதவாத அரசியல் அமைப்புகளான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் மதிப்புக்குரிய தலைவர்களை, விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்ட ஆரம்பித்ததிலிருந்து, தமிழர்களின் பிரதிநிதி, தமிழர்களின் நலனுக்காக போராடும் அமைப்பு என்று ஏற்கப்படும் உரிமையை விடுதலைப் புலிகள் இழந்துவிட்டார்கள்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றத்தின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு நம்பத் தகுதியற்ற, முதிர்ச்சியில்லாத, ஆபத்தான அமைப்பு என்பது நிரூபணமானது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட அந்த துரதிருஷ்டவசமான நாளிலிருந்து, அ.தி.மு.க.வின் கொள்கை சீராகவும், தெளிவாகவும் இருந்து வருகிறது. இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த இலங்கை அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அதனை அ.தி.மு.க. முழுமையாக எதிர்க்கும்.

சுய நிர்ணயத்திற்காகவும், சம உரிமைக்காகவும் போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க.வின் முழு ஆதரவு உண்டு. அதே சமயத்தில் இந்த இலக்கை எய்துவதற்காக ஆயுதம் ஏந்தி போராடுவதையும், கட்டுக்கடங்காத, கண்மூடித்தனமான வன்முறையில் ஈடுபடுவதையும் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. பேச்சு வார்த்தை மூலம் அமைதியான வழியில் அரசியல் தீர்வு காணப்படுவதே இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க உதவும் என அ.தி.மு.க. நம்புகிறது.

இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடுவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப் பேராட்சிக்குட்பட்ட சுயாட்சி கோருவதே நியாயமானது என்றும் அ.தி.மு.க. கருதுகிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, அது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் என்றில்லாமல், தோட்டத் தொழிலாளர்களாகவுள்ள தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சிறுபான்மை அமைப்பினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. கருதுகிறது. முதிர்ந்த பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய முயற்சியில் அனைத்து தமிழ் மிதவாதிகளும், தமிழ் அரசியல் அமைப்புகளும் இடம் பெற வேண்டும்.

இந்தப் பொறுப்பை தீவிரவாதிகளிடம் ஒப்படைப்பது தற்போதுள்ள சூழ்நிலையை மேலும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மக்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை வளர்த்து, அவர்களது துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். சர்வாதிகாரத்தை அடைய வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்களது தலைவனின் வழியில் குறுக்கிடுபவர்கள் என யாரை நினைத்தாலும், அவர்களை கொல்வது, பிற அரசியல் மற்றும் தீவிரவாத குழுக்களைச் சேர்ந்த மிதவாத தமிழ்ச் சகோதரர்களையும், தலைவர்களையும் அழிப்பது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமிழர்களின் பிரதிநிதியாக செயல்படும் தார்மீக உரிமையை இழந்துவிட்ட எதேச்சாதிகார விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த அரசியல் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது, ஈடுபடக்கூடாது என அ.தி.மு.க. கருதுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது தங்களையும், தங்கள் தலைவனையும் பாதுகாப்பதற்காக, வெட்கமில்லாமல் இளம் சிறுவர்களை தங்கள் படையில் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி வரும் ஓரு தீவிரவாத அமைப்பு ஆகும்.

என்னுடைய நிலைபாட்டை நான் தெளிவாக விளக்கிவிட்டதால், தன்னுடைய நிலையற்ற மற்றும் சஞ்சலமான நடவடிக்கைகளின் மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் குறித்து கபட நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதியிடமிருந்து கீழ்காணும் கேள்விகளுக்கு விளக்கம் கோருகிறேன்.

1. தமிழ் மண்ணில் ராஜிவ் காந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா? அப்படியானால், ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, மைனாரிட்டி அரசின் முதலமைச்சராக பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக இல்லையா? மனவுறுத்தலாக இல்லையா?

2. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்றளவிலும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த போது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கின்றன. தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த மத்திய அமைச்சருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாதா? ஏன் அவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை? தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பதவியை ஏன் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை?

3. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்த போது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? இலங்கை ராணுவ வீரர்கள் வருகை புரிந்ததையும், பயிற்சி பெற்று திரும்பியதையும் ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டின. இருந்த போதிலும், இலங்கைத் தமிழர்கள் குறித்து மிகுந்த வருத்தப்படுவதாக நாடகமாடும் கருணாநிதியும், அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களும், கூட்டணிக் கட்சியினரும் மவுனம் காத்தனர்.

4. காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது, தனி நாடு கோரிக்கை குறித்து, கருணாநிதி மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் உள்ள தனித் தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளாரோ, அதே நிலையை இந்தியாவின் பிரச்சினைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா?தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் இந்தக் கேள்விகளுக்கு கருணாநிதியின் பதில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஏனெனில், கருணாநிதியின் பதிலிலிருந்து அவர் ஓர் உண்மையான இந்தியரா, உண்மையான தமிழரா, அல்லது மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகள், ஆகியோர் மீது அசாதாரணமான பற்றுள்ள வெறும் குடும்பத் தலைவரா என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டு விடும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக