வெள்ள நிவாரணம் கருணாநிதி அறிக்கை

முதல்வர் கருணாநிதி இன்று (டிசம்பர் 11) வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெருமழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, உடைமை இழப்பு போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் அளித்து; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து; இந்த மாதிரியான பேரழிவை தடுப்பதற்கு எதிர்காலத்திற்கும் தேவையான நிலையான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதோடு; அதற்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்து முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதியைக் கொண்டு,உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய்;பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி; சென்னை மாநகரத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் மழை-வெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய்; மாவட்டங்களில் மழை-வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், மழை-வெள்ளம் புகுந்த வீடுகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய்; முகாம்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வேட்டிகள், சேலைகள்;பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள்; என்று இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு 175 கோடி ரூபாய் அளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உடனடி சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து நிவாரணப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பயிர்ச் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள நெறிமுறைகளின்படி எக்டேர் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி என்பதற்கு மாறாக, அதனை உயர்த்தி எக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் என்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நமது அரசின் சார்பில் ஏற்கனவே 2006-2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்துவரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி பதிவு செய்து கொண்ட விவசாயிகளுக்கு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு எக்டேருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி உதவி கிடைக்க இருக்கிறது.

இவை அனைத்தையும் விளக்கி அரசின் சார்பிலேயே அறிவிப்புகள் வெளியிட்டிருந்தும்கூட; சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு - அனைவரும் பாராட்டும் அளவிற்கு நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளிலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்பி - சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடச் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் தடுத்தி நிறுத்தி; மாநிலத்தில் தொடர்ந்து சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசுக்கு இருப்பதைக் கருத்தில்கொண்டு; மக்கள் பிரச்சினையில் உண்மையிலேயே கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை வேண்டுவதுடன், அரசின் கடமையை தொடர்ந்து செய்திட உறுதி எடுத்துக் கொள்கிறோம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக