போயஸ் கார்டன் போன கம்யூனிஸ்டுகளுக்கு சிரிப்புதான் பதில் கருணாநிதி பேட்டி

முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி இன்று (டிச‌ம்ப‌ர் 8)நிருப‌ர்க‌ளுக்கு அளித்த‌ பேட்டி:

கேள்வி: வெள்ள நிவாரணப் பணிகள் எல்லாம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உதவித் தொகைகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சில எதிர்க் கட்சியினர் குறை கூறுகிறார்களே?

பதில்: அது தான் எதிர்க்கட்சி. அவர்கள் விமர்சனங்களைச் செய்யச் செய்ய - குறைகளைக் கூறக் கூற அவற்றைத் திருத்திக் கொண்டு நாங்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுவோம்.

கேள்வி: மத்திய அரசிடம் வெள்ள நிவாரணத்திற்காக நாம் கேட்ட தொகையில் பத்து சதவிகித அளவிற்குக் கூட அவர்கள் நிதி உதவி செய்யவில்லை. இந்த முறையாவது செய்வார்களா?

பதில்: சென்ற முறை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது, தமிழக அரசு கேட்டதில் ஒரு பகுதியைக் கூடத் தரவில்லை, இந்த முறையாவது நாங்கள் கோரியுள்ள நிதியை வழங்க வேண்டுமென்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவருமான சோனியா காந்தியிடமும் கோரியிருக்கிறேன். அதனால் நாம் கோரிய அளவிற்கு நிதி வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி கணிசமான அளவிற்கு வெற்றி பெற்றுள்ளதே?

பதில்: இன்னும் முழுமையாக முடிவுகள் வரவில்லை. வந்துள்ள வரை,காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

கேள்வி: விரைவில் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போது கிடைத்துள்ள வெற்றி தொடருமா?

பதில்: பாராளுமன்றத் தேர்தல் முடிந்து டெல்லியில் ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ் கட்சிதான்.

கேள்வி: இலங்கைத் தளபதி ஒருவர் நேற்று கூறும்போது தமிழ்நாட்டின் தலைவர்கள் கோமாளிகள் என்று அருவறுக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்திருக்கிறாரே?

பதில்: அந்தத் தளபதி அப்படி சொல்லியிருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள தமிழகத்தின் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருவரைப் பற்றி மற்றொருவர் விமர்சித்துக் கொள்வது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழகத் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படி விமர்சித்திருந்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கேள்வி: டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தளபதியின் செய்கை குறித்து தாங்கள் பிரதமரின் கவனத்திற்குச் கொண்டு செல்ல வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் அது பற்றி கூறியுள்ளதே இந்நேரம் பிரதமரின் கவனத்திற்குச் சென்றிருக்கும்.

கேள்வி: வெள்ள நிவாரணப் பணிகளை அரசாங்கம் முறையாக ஈடுபட்டு செய்து கொண்டிருக்கும்போது, சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தூண்டி விடும் விதமாக ஆர்ப்பாட்டம், மறியல் என்றெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களே?

பதில்: நாங்கள் நிவாரணம் அளித்துக் கொண்டிருக்கும்போதே சில எதிர்க்கட்சிகள் நிவாரணமே அளிக்கவில்லை என்பதைப் போலவும், அதனால் ஆர்ப்பாட்டம், மறியல், சாலை மறிப்பு போன்றவற்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்திருப்பது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான். நான் திட்டவட்டமாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். தமிழகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டமோ, பேரணிகளோ நடத்த விரும்பினால், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படாமல் காவல் துறையினரிடம் அனுமதியைப் பெற்று எந்தக் கோரிக்கையானாலும் அவற்றை வலியுறுத்தலாம். அவ்வாறு இல்லாமல் சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை போயஸ் தோட்டத்திற்கு போனதைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: (சிரிக்கிறார்) இதுதான் பதில்.

கேள்வி: வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போகப் போவதாகச் சொல்லப்பட்டதே, தேதி உறுதியாகி விட்டதா?

பதில்: இன்னும் தேதி குறிப்பிடவில்லை. விரைவில் செல்வார்.

கேள்வி: இலங்கை தளபதி மேலும் கூறும்போது போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை இந்திய அரசு வைக்காது என்று சொல்லியிருப்பதைப் பற்றி?

பதில்: இதைப்பற்றியெல்லாம் நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியில் பிரதமரைச் சந்தித்த போது விரிவாகப் பேசி,அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுதான் இலங்கைக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சென்று நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தவும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தவும், அந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ளச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: மத்திய அமைச்சரவையில் மேலும் சிலரை நியமிக்கப் போவதாக பிரதமர் சொல்லியிருக்கிறாரே, தமிழகத்திற்கு மேலும் வாய்ப்பு கிடைக்குமா

பதில்: வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சிதான்.

கேள்வி: இது போன்ற வெள்ள நேரத்தில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றி பேசிய போது நிரந்தரமான சில முயற்சிகளை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அதற்காக ஏதாவது குழு அமைக்கப் போகிறீர்களா? நடைமுறையில் அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள்?

பதில்: வெள்ளம் போன்ற இயற்கை இடர்களால் ஏற்படக் கூடிய விளைவுகளைத் தடுத்து நிறுத்த அரசின் அத்தனை துறைகளும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும்.

கேள்வி: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது என்று சில பேர் சொல்கிறார்களே?

பதில்: அவர்களுக்கு போதாது.

கேள்வி: மத்திய அரசின் சார்பில் நேற்றையதினம் பெருமளவிற்கு பல்வேறு சலுகைகள் எல்லாம் தொழில் துறையிலும், மற்ற துறைகளிலும் அறிவித்திருப்பதைப் பற்றி?

பதில்: இந்தியாவைப் பொறுத்தவரையில் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு முன்னேற்ற நிலைமைக்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தீர்களே?

பதில்: நேற்றுதானே கடிதம் எழுதியிருக்கிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் இப்போது இருக்கக் கூடிய மின்சாரத் த‌ட்டுப்பாட்டிற்கு...?

பதில்: இப்போது இல்லையே?

கேள்வி: ஏற்பட்டிருந்த மின் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசிட மிருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரம் வராததுதான் காரணமா?

பதில்: மின் தட்டுப்பாட்டிற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே இதுவும் ஒரு காரணம். மத்திய தொகுப்பிலிருந்து 2000 மெகாவாட் மின்சாரம் நமக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. அதைத்தான் தற்போது டெல்லி சென்றிருந்த போது அந்தத் துறையினரிடம் விரிவாகப் பேசினோம். டிசம்பரில் ஆயிரம் மெகாவாட் முதற் கட்டமாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: மழைக்குப் பிறகு சென்னையில் சாலைகள் மோசமாக உள்ளதே?

பதில்: படிப்படியாகத்தான் சரி செய்ய முடியும்.

கேள்வி: அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு?

பதில்: விரைவில் சட்டமாக உள்ளது. எடுக்கப்பட்டுள்ள முடிவினை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி ஆய்வு செய்து பரிந்துரை கூற அமைச்சரவை துணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் இன்றைக்கும் கூடி, அறிக்கை ஒன்றினை என்னிடம் அளித்திருக்கிறார்கள். எனவே மிக விரைவில் சட்ட மன்றத்தில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேறும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக